கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து வகையான கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதே போல ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முதற்கொண்டு பணியாளர்கள் வரை அனைவரும் கை சுத்திகரிப்பான்களை உபயோகிப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து வகையான கொரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.
காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் – புதிய அறிவிப்பு!
மேலும் இவ்வகையான கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை வால்ஸ் ரோட்டில் உள்ள 2 கடைகள், மீரான் சாகிப் தெருவில் உள்ள ஒரு கடையில் முறையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது தவிர சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், வேளச்சேரி, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ககன்சிங் கூறுகையில், ‘கொரோனா தொற்று பாதிப்பானது இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அதனால் கடைகளுக்கு வரும் பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட முறையான கொரோனா வழிகாட்டுதல் முறைகளை பின்பற்ற வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வகையான கட்டுப்பாடுகளை மீறும் கடைகள் கண்டறியப்பட்டால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அதனால் கடை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.