பொதுமக்கள் கவனத்திற்கு – குப்பைகளை கொடுக்க புது விதி! மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை மாநகராட்சி மக்கள் குப்பைகளை கொட்டும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.
மாநகராட்சி அறிவிப்பு
தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகராட்சியில் கொட்டப்படும் குப்பைகள் சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதால் சுற்றுசூழல் மாசு அடைவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் குப்பைகளை கொட்டும் போதே மக்கள் இவ்வாறு தரம் பிரித்து தான் வழங்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் மண்டலங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த விழிப்புணர்வை தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். அதன் படி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மக்கும் உறையில் போட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.