தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
இந்தியாவில் பருவநிலை மாற்றம் அவ்வப்போது கால நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கோடை காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட சூரிய வெயில் சுட்டெரிக்கும். இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மற்ற ஆண்டுகளை போல நடப்பாண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சம் கொண்டு வீடுகளிலேயே முடங்கினர்.
சராசரியாக வெயில் 100 டிகிரி செல்சியஸை எட்டியது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆங்காங்கே கனமழை பெய்தது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் வெப்பச்சலனத்தால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் மே 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் தமிழக கரையோரத்தில் இன்று பலத்த சூறாவளி வீசக்கூடும். மே 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.