தமிழகத்தில் குரங்கு அம்மை வைரஸ் பரவலா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
கொரோனாவை போல குரங்கு அம்மை நோய் பாதிப்பு அடுத்தடுத்த நாடுகளுக்கும் வேகமாக பரவி தமிழகத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இருந்தது. இதனால் பொதுமுடக்கம், ஊரடங்கு என்று பல இன்னல்களை இந்த உலகம் அனுபவித்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் , தற்போதும் அதன் தாக்கம் சில நாடுகளில் இருந்து வருகின்றது. இந்நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் அண்மையில் பிரிட்டனில் பரவ தொடங்கியது, மேலும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
Exams Daily Mobile App Download
உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் 4,800 செவிலியர்களுக்கான சம்பளம் 14,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏப்ரல் முதல் கணக்கிட்டு உயர்வு வழங்கப்படும். இவர்களை போன்றே சுகாதார பணியாளர்கள் 2,400 பேருக்கான சம்பளம் 11,000ரூபாயில் இருந்து 14,000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
சென்னை மாநகர இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து காவல்துறை உத்தரவு!
மேலும் தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ 4 வகை வைரஸ் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த அவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. உலகையே மிரட்டி வரும் குரங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவவில்லை; எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம், இருப்பினும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதையடுத்து ஜூன் 12ஆம் தேதி மாநிலத்தில் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.