தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – நிதியமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரேஷன் அட்டைகள் மூலமாக மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க உள்ள தமிழக அரசின் திட்டம் பற்றி இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட் தாக்கலில் தெரிவித்துள்ளார்.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வந்தனர். அதில் முக்கிய இடம் பிடித்த திட்டமாக தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தான். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தான் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் – பட்ஜெட் 2022-2023 ! முழு விபரம் இதோ!
ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 போன்றவை அமலுக்கு வர முதல்வர் உத்தரவிட்டார். அதேபோன்று பெண்களுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிக அளவிலான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் போன முறை பட்ஜெட் தாக்கலின் போது கூட இந்த திட்டத்தை அமல் படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச் 18ம் தேதியான இன்று தமிழகத்தில் 2022- 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை 10மணிக்கு தமிழகத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய தினம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பு கட்டாயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பட்ஜெட்டில் அதை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மாறாக, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.