ஆட்டோ, டாக்சி, பேருந்து கட்டணங்கள் உயர்வு – மே 1 முதல் அமல்! மாநில அரசு அறிவிப்பு!
கேரளாவில் ஆட்டோ, டாக்சி, பேருந்து உள்ளிட்டவைகளின் கட்டணங்களை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் போக்குவரத்து துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டண உயர்வு:
இந்தியா முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரமும் தடைபட்டது. தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்த கொரோனா அலைகளை உருவாக்கியது. அதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இவற்றினால் ஏராளமான மக்கள் வேலையிழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டனர்.
இந்த நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென்று உயர்ந்தது. இவற்றை தொடர்ந்து தற்போது கேரளாவில் ஆட்டோ, டாக்சி, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், குறைந்தபட்ச டாக்சி கட்டணம் ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தேர்வில்லாமல் தமிழகத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்த நிலையில் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கட்டண நடைமுறை மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் வேளையில் தற்போது உயர்ந்துள்ள ஆட்டோ, டாக்சி, பேருந்து ஆகியவற்றின் கட்டணங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது.