TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து நோய் பரவல் குறைந்து வருவதால், அரசு சார்ந்த போட்டித்தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வும், 7000+ காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் மே 21, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில் எழுதலாம். அதன்படி தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு 90-க்கும் குறைவான மதிப்பெண் பெறுவது அடிப்படை ஆகும்.
NPCIL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் பேசிய போது, 11,78,175 பேர் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதுவரை 9,10,321 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர் என தெரிவித்தார். நேர்முகத் தேர்வு பணியிடங்கள் 116 மற்றும் நேர்முக தேர்வு அல்லாத 5413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப கூடவோ அல்லது குறையவோ கூடும். குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என்றும், செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.