சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோவில் நடை திறப்பு!
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை, வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திறக்கப்படுகிறது. மேலும் 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இதனால் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கோவில் நடை திறப்பு:
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் மாதாந்திர பூஜைகளும் பக்தர்கள் இன்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் கடந்த வருடம் முதல் படிப்படியாக தாக்கம் குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த மாதம் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14ம் தேதி மாலை சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்தார். மேலும் கணபதி ஹோமம், உஷபூஜை உட்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிலையில் ஆனி மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
அதாவது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மேலும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷ பூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இதையடுத்து தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். பின்பு 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். இதையடுத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.