CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – மறுகூட்டல் விண்ணப்ப பதிவு!
சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மறுகூட்டல் விண்ணப்பதிவு:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, 2021-22 கல்வியாண்டுக்கு பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. மேலும் மாணவர்கள் 2 அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த இரண்டாம் பருவத்திற்கான 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்த தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மாணவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீடு முறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூலை 26 (செவ்வாய்கிழமை) முதல் ஜூலை 28 நேற்று வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடநெறிக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதன் பின், ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழக பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகள் – அரசின் புதிய நடவடிக்கை
இதற்கு, ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் நகல் பெற்றவர்கள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு,முதல் அமர்வுக்கு 30% முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வுக்கு 70% முக்கியத்துவமும் கொண்டு 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ தயாரித்தது.
இருப்பினும், இரண்டு அமர்வுகளில் ஏதேனும் ஒரு அமர்வின் போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேசிய/சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள்,சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள், தனிமைப்படுத்திக் கொண்ட மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருந்த மாணவர்கள் ஆகிய சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.