தமிழகத்தில் பள்ளிகள் திறந்திருக்கும், வருகை கட்டாயமில்லை – ஆலோசனைக்கு பின் அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பிற்பாடு, பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் எனவும் மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று திறக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். என்றாலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டமாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும் பெற்றோர்களிடம் இருந்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
TN TRB தேர்வு அறிவிப்பு – வயது வரம்பு பிரச்சனைகள்! TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு?
இது குறித்த அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை அமலில் இருந்து வரும் ஊரடங்கு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு பிற்பாடு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. இனி வரும் நாட்களிலும் அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும். பள்ளிக்கு வர வேண்டியவர்கள் வரலாம். என்றாலும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். இதற்காக விமர்சனங்கள் எழும்பலாம். அது பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி – மத்திய அரசு!
இது தவிர, கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் சற்று அச்சம் எழுந்துள்ளது. என்றாலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி வற்புறுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.