TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – தேர்வு தேதி இன்று அறிவிப்பு!
தமிழக அரசுப்பணிக்காக நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்புகள் இன்று (பிப்.18) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
குரூப் தேர்வு
தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் பல்வேறு வகையான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் உயர் பணியிடங்களில் இருப்பவர்கள் துவங்கி கிளார்க் பணிகள் வரையுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 முதல் குரூப் 5, 6, 7, 8 போன்ற தேர்வுகள் நடத்தப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த TNPSC போட்டித்தேர்வுகளுக்கான கால அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டில் வெளியிடப்படும்.
அதன் படி, கொரோனா பேரலை தாக்கத்திற்கு மத்தியில் இந்த ஆண்டு குரூப் தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசு, TNPSC போட்டிக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இந்த 2022ம் ஆண்டில் குரூப் 2, 2 A, குரூப் 4 உள்ளிட்ட 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இப்போது TNPSC வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையின் படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வும், சுமார் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடத்தப்பட உள்ளது. இப்போது குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கானவர்கள் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுக்கான அறிவிப்பு இன்று (பிப்.18) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
இதற்கிடையில் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது TNPSC தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழ்மொழி பாடத்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் மற்ற தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படாது என்பதை கவனத்தில் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.