திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தினசரி நடைபெறும் சேவைகளின் விபரம்!
இந்திய புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை 3 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படும் நிகழ்வு வரையுள்ள தினசரி சேவைகள் குறித்த முக்கியமான விவரங்கள் பக்தர்களின் கவனத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
தினசரி சேவைகள்
ஒவ்வொரு நாளும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் தினசரி சேவைகள் அதிகாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். முதலில் 3.30 மணிவரை நடைபெறும் சுப்ரபாத தரிசனத்திற்கு பின்பாக சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிப்பாளர் ஒருவர் என 6 பேர் கோவிலின் தங்க வாசலுக்கு வருவார்கள். தொடர்ந்து துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்த பின்னர், சன்னதி திறக்கப்படும். இப்போது சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்லும் போது கௌசல்யா சுப்ரபாதம் பாடப்படும்.
சுவாமி சன்னதிக்குள் தீப்பந்தத்தை வைத்து விளக்குகளை ஏற்றிய பிறகு, முதல் நாள் இரவில் தொட்டிலில் படுக்க வைத்திருந்த ஸ்ரீனிவாச மூர்த்தி பெருமாள் விக்கிரகத்தை வெங்கடாசலபதி அருகில் வைப்பார்கள். சன்னதி திறந்ததும், பாலும் வெண்ணெயும் படைத்து தீபாராதனை செய்யப்படும். இந்த சேவைக்கு பக்தர்கள் ரூ.120 கட்டணத்தில் 3 மாதங்களுக்கு முன், பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கிடையில் ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து எடுத்து வரப்படும் 3 குடம் புனிதநீரை காலை, மாலை, இரவு பூஜைக்கு சேர்த்து வைக்கப்படும்.
இதில் பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும். இந்த ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பிறகு உத்தரணியில் உள்ள தண்ணீரை எடுத்து சுவாமியிடம் நீட்டிய பிற்பாடு, பாதத்தில் ஊற்றுவார்கள். இதில் ஸ்ரீனிவாச மூர்த்திக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் நீர் அபிஷேகம், பசும்பால், சந்தனம், தேன், மஞ்சள் அபிஷேகம் ஆகியவை முடிந்து வஸ்திரம் சாத்தப்படும். பிறகு நெற்றியில் நாமம் இடப்படும்.
பிறகு தீபாராதனையுடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். இதனை தொடர்ந்து காலை 3.30 முதல் 3.45 வரை சுத்தி செய்யப்படும். அப்போது, முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூ கிணற்றில் போட்டவுடன், பின்னர் புதிய மாலைகள் ஜீயங்கார் என்பவரால் கொண்டுவரப்பட்டு போடப்படும். தொடர்ந்து காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். இதில் முதலாவதாக சன்னதியில் உள்ள மகாலட்சுமிக்கு பூச்சரத்தை சாத்தியவுடன் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். தொடர்ந்து 25 நிமிடம் தீபாராதனை செய்யப்படும்.
இந்த தரிசனத்துக்கு ரூ.220 கட்டணம் செலவாகும். இதனை தொடர்ந்து காலை 4.30 மணிக்கு கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதில் கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து ஒரு மறைவுக்கு கொண்டு சென்று எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நெய் வேத்தியம் செய்து அர்ச்சனை நடக்கும். பிறகு அர்ச்சகர் பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். தொடர்ந்து முதல் நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வார்கள். இந்த காட்சியை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இது முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நெய் வேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். இதில் தயிர்சாதம் படைக்கப்படும் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் நெய் வேத்தியம் படைக்கப்படும். தொடர்ந்து அடுத்த மணி அடிக்கப்பட்டவுடன் 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 அஷ்டோத்திர நாமாக்கள் வாசிக்கப்படும். இதை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிறகு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். அந்த வகையில் வெங்கடாசலபதிக்கு ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி நடத்தகும் சகஸ்ரநாமத்தை பார்க்க ரூ.120 கட்டணமாகும்.
இந்த அர்ச்சனைகாலை 4.45 மணி முதல் 5.30 வரை நடக்கும். இதை தொடர்ந்து அர்ச்சனாந்தர தரிசனம் பூஜை நடத்தப்படும். இதை பார்க்க 3 மாத முன்பதிவுடன் ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்ததாக, மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் ஊஞ்சல் மண்டபத்தில் ஏற்றப்படும் போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கு ரூ.1000 கட்டணம் உண்டு. வழக்கமாக, வியாழக்கிழமைகளில் சாலிம்பு என்று சொல்லப்படும் நிகழ்வில் வெங்கடாசலபதிக்கு ஆபரணங்கள் எதுவும் இல்லாமல் வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப்படும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மூன்றே நாளில் அப்ரூவல்!
தொடர்ந்து திருமண தடை உள்ள ஆண், பெண்களுக்காக திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். அந்த வகையில் ஹோமங்கள் நடத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதற்கும் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் கலந்துகொள்பவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். இந்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.