அண்ணா பல்கலை துணைவேந்தராக தமிழர் நியமனம் – ஆளுநருக்கு கோரிக்கை!
அண்ணா பல்கலையின் துணை வேந்தராக தமிழரை நியமனம் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலை துணை வேந்தர்:
இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். நாட்டின் நிறுவன தரவரிசை கட்டமைப்பில் இது பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. அண்ணா பல்கலையின் துணை வேந்தரை நியமனம் செய்வதற்காக குழு ஒன்றை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.
துணை வேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அண்ணா பல்கலையின் துணை வேந்தராக பதவியில் இருந்த சூரப்பா அவர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. புதிய துணை வேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 10 பேர் நேர்முகத் தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர். நேர்காணலின் முடிவில் தகுதியான 3 பேரை இறுதிசெய்து அவர்களின் பெயரை ஆளுநரிடம் தேடல் குழு வழங்கும், அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆளுநர் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
துணைவேந்தர் பதவிக்கான நேர்காணல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. தலைசிறந்த, திறமையான, நேர்மையான கல்வியாளரை துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களை துணைவேந்தராக தேர்வு செய்தால், பல்கலைக்கழக ஊழியர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.