நாட்டில் முதல்முறையாக கால்நடை ஆம்புலன்ஸின் 2ம் கட்டம் தொடக்கம் – ஆந்திர மாநிலத்தின் சூப்பரான திட்டம்!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது தற்போது இதன் இரண்டாம் கட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக இரண்டாம் கட்ட கால்நடை சேவைகளை அறிமுகப்படுத்திய மாநிலமாக ஆந்திர மாநிலம் திகழ்கிறது.
கால்நடை ஆம்புலன்ஸ்
ஆந்திரா மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு கால்நடைகளுக்கான ‘Dr YSR Sanchara Pasu Aarogya Seva’ என்ற ஆம்புலன்ஸ் சேவைகளை மாநில முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு தொகுதிக்கு 2 ஆம்புலன்ஸ் என 175 ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட சேவையை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி ஆந்திரா மாநிலத்தில் தான் நாட்டிலேயே முதல்முறையாக அரசாங்கத்தால் நடத்தப்படும் கால்நடை சேவையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலம் முழுவதும் 340 கால்நடை ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகள் விரைவில் கிடைக்கும்.
மேலும் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு மருத்துவர், உதவியாளர் மற்றும் ஓட்டுநர்கள் இருப்பார்கள். அத்துடன் 20 வகையான உர பரிசோதனைகள் மற்றும் 15 வகையான ரத்த பரிசோதனை கருவிகள் கொண்ட சிறிய ஆய்வகம் இருக்கும். அத்துடன் மாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகளும் இந்த ஆம்புலன்ஸில் அமைக்கப்பட்டுள்ளன.