கோவையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல் – தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்! ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டி படைத்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக கொரோனா பரவல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 23 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு 1000த்தை தாண்டிய நிலையில் நேற்று ஒரே நாளில் 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் விரைவில் உயர்வு!
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் மொத்தமாக 347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் தினசரி பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பல கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது காய்ச்சல் பரிசோதனை கிருமி நாசினி வைத்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் இருந்தால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களின் உடன் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் 12-14 வயது வரை உள்ளவர்கள் Corbevax தடுப்பூசி, 15-18 வயது உடையவர்கள் Covaxin தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.