தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீடு கட்ட முன்பணம்! சட்டப்பேரவையில் முடிவு!
தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்கப்படும் என்று மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
முன்பணம் அறிவிப்பு
பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவ காப்பீடு, பயணப்படி உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் புதிதாக வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு அரசு சார்பில் முன்பணம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, தற்போது தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் முடிவு என்ன?
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், ‘மனித வாழ்வில் அத்தியாவசியமான தேவைகளில் முக்கியமானது இருப்பிடம் ஆகும். அரசுப் பணியாளர்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க அரசு, வீடு கட்டுவதற்கான முன்பணத்தை அளித்து வருகிறது. இந்த முன்பணம் மத்திய அரசு அலுவலர்களுக்கு ரூ.60 லட்சமும், மாநில அரசுப் பணியாளர்களுக்கு ரூ.40 லட்சமும் கடனாக, 4 ஆண்டுகள் முறையான பணி மற்றும் நுழைவுப் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த பணியாளர்களுக்கு அவர்கள் பெறும் ஊதியத் தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது.
இந்த வீடுகட்டும் முன்பணத்தில், 50% மனை வாங்குவதற்கும் மீதமுள்ள 50% வீடு கட்டவும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வீடுகட்டும் முன்பணம் முழுவதும் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னையில் நெற்குன்றம், திட்டப்பகுதி II-இல் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பினை வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சமும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும் கூடுதல் கடனாக அனுமதிக்கப்படுகிறது.
மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏற்கனவே வீடு கட்ட கடன் பெற்றிருக்கும் அலுவலர்களுக்கு, அவற்றை அரசின் வீடுகட்டும் முன்பணமாக மாற்றிக்கொள்ளும் நடைமுறையை அரசு சில விதிமுறைகளுடன் தற்போது அனுமதித்துள்ளது. இக்கடன் தொகை அதிகபட்சமாக 240 தவணைகளில், அசல் 180 தவணைகளிலும் பின்னர் வட்டி 60 தவணைகளிலும் பிடித்தம் செய்யப்படும். இக்கடன் தொகைக்கான வட்டி, மாதாந்திர நிலுவைத் தொகைக் குறைவின் அடிப்படையில், ஒவ்வொரு மாத இறுதியில், நிலுவையாக உள்ள தொகைக்கு படி வீத முறைப்படி (Slab rates) கணக்கிடப்படுகிறது.
இப்போது வீடு கட்டும் முன்பணம் பெற்ற அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில் ஒரு திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதன்படி, வீடுகட்டும் முன்பணம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், மாதாந்திர தவணைத் தொகையில் 1% பிடித்தம் செய்யப்படும். அந்த வகையில் வீடு கட்டும் முன்பணம் அளிப்பதற்காக நடப்பு நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடு கட்டும் முன்பணம் வழங்குவதற்கு வசதியாக தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.