விஜய் டிவி விருதுடன் ‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் செய்த காரியம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லனுக்கான விருது பெற்ற ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் சதீஷ் அந்த விருதை தனது ஆசிரியைக்கு சமர்ப்பித்து வெளியிட்ட வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நடிகர் சதீஷ்
டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நெடுந்தொடரும் ரசிகர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்துள்ள ஒரு முக்கியமான சீரியல் ஆகும். இந்த சீரியலை ‘பாக்கியலட்சுமி’ என்று சொல்வதை விட கோபி நடிக்கும் சீரியல் என்று சொன்னால் ரசிகர்களால் எளிதில் புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது. இதற்கு காரணம் கோபி என்ற கதாப்பாத்திரம் மட்டும் தான்.
சன் டிவி “ரோஜா” சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!
இத்தொடரில் திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி தனது மனைவி பாக்கியாவை விட்டு விட்டு ராதிகா என்ற காதலியுடன் பழகி கொண்டிருக்கிறார். குடும்பத்தில் தனது பெயர் கெட்டுவிடக்கூடாது என கருதி, ஒளிந்து மறைந்து ராதிகாவுடன் காதல் செய்யும் கோபி எப்போது பாக்கியாவிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் கோபி என்ற எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகர் சதீஸ். தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தக்க சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கும் இவருக்கு இவ்வளவு வரவேற்பை பெற்றுத்தந்தது இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மற்றும் கோபி கதாப்பாத்திரம் தான்.
ஏனென்றால் திருட்டுத் தனமாக ராதிகாவின் வீட்டுக்கு செல்வது, பாக்கியாவிடம் பொய் சொல்வது, அப்பா கேட்டால் சமாளிப்பது, வீட்டில் உள்ள எல்லாருக்கும் நல்லவராக இருக்க முயல்வது என ஒவ்வொரு காட்சிகளிலும் எக்கச்சக்க எக்ஸ்ப்ரஷனை கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார் கோபி. இப்படி மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்ற நடிகர் சதீஷுக்கு இப்போது விஜய் டிவி சிறந்த வில்லனுக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றிருந்த நிலையில் ‘பாக்கியலட்சுமி’ நடிகர் சதீஷுக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை நடிகர் சதீஸ் தனது தமிழ் ஆசிரியைக்கு சமர்ப்பித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இது தொடர்பாக ‘பாக்கியலட்சுமி’ நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவில், ‘என் அருகில் இருப்பது தமிழ் ஆசிரியை. தமிழ்த்தாய். தமிழ் அன்னை. இவர்களை நான் அம்மா என்று தான் அழைப்பேன். நான் 9வது வகுப்பு படிக்கும் போது என்னை முதல் முதலில் மேடை ஏற்றியது இவர்கள் தான். இவர்கள் தான் விதை. நீர். நிலம் எல்லாமே. இவர்களால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். என்னதான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் தனிப்பட்ட விதத்தில் நடிகர் சதீஷ் பெண்களை மதிக்கக்கூடியவராக இருக்கிறார் என்பது அவரது பேச்சிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.