பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு இனி வரும் நாட்களில் ஏராளமான விடுமுறை வர உள்ளன. இதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்லத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் கட்டணம்:
இனி வரும் மாதங்களில் ஏராளமான பண்டிகைகள் வர உள்ளன. விழாக்காலங்களை முன்னிட்டு அதிகளவிலான மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று திரும்புவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்கின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்து சேவையும் உள்ளன.
பண்டிகை கால சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கினாலும் தனியார் பேருந்துகளில் கணிசமான கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. பொதுமக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பன்மடங்கு விலையை உயர்த்தி பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. மேலும் பொதுமக்களும் வேறு வழியின்றி ஊருக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்கின்றனர். ஊரிலிருந்து மீண்டும் பணிக்கு திரும்பும் போதும் இதே நெருக்கடியை பயணிகள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஜான்சன் பேபி பவுடர் விற்பனை நிறுத்தம் – அதிர்ச்சி தகவல் வெளியீடு
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.