மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்றினால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா:
சீனாவின் உகான் நகரில் 2019 ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் 5 மாநிலங்களில்(டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம் ) அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று தலைதூக்கி உள்ளது. குறிப்பாக 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் ‘ஒமைக்ரான்’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.
இவர்களில் 3 டாக்டர்கள் மும்பை சென்று வந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள். 5 பேர் வீட்டுத்தனிமையிலும் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி கொரோனா 3வது அலைக்கு பின், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தொற்று பாதித்த 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது வரை அறிகுறி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.