தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார் .
பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாவலரேறு :
தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது
பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும் :
திரட்டு நூல்கள் – 12
1. இலக்கணக் கட்டுரைகள்
2. தமிழியற் கட்டுரைகள்
3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
4. மொழிநூற் கட்டுரைகள்
5.பண்பாட்டுக் கட்டுரைகள்
6. தென்சொற் கட்டுரைகள்
7.செந்தமிழ் சிறப்பு
8.தலைமைத் தமிழ்
- தனிச் சொற்கள்
- தொகுதிச் சொற்கள்
9.மறுப்புரை மாண்பு
10.தமிழ் வளம்
11.பாவாணர் நோக்கில் பெருமக்கள்
12.பாவாணர் உரைகள்
இறப்பு :
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 15 பின்னிரவு (அதிகாலை) இயற்கை எய்தினார்.
பிறப்பு | பெப்ரவரி 7 , 1902 |
---|---|
சங்கரன்கோவில், திருநெல்வேலி , தமிழ்நாடு | |
இறப்பு | சனவரி 15, 1981(அகவை 78) |
மதுரை , தமிழ்நாடு | |
அறியப்படுவது | தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர் |
பெற்றோர் | ஞானமுத்து தேவேந்தரனார், பரிபூரணம் அம்மையார் |
பிள்ளைகள் | நச்சினார்க்கினிய நம்பி, |
சிலுவையை வென்ற செல்வராசன், | |
அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், | |
மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, | |
மணிமன்ற வாணன், | |
பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் |