தமிழக அரசுப்பள்ளிகளில் புதிதாக 8,000 ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 8,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
ஆசிரியர்கள்
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் 8,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக மாணவர்கள் தங்களது குரல்களை எழுப்ப வேண்டும். தற்போது, மாநிலத்திற்கான கல்விக்கொள்கையை உருவாக்கும் முயற்சியில் முதல்வர் முக ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள் – மீறினால் அபராதம்! அரசு அதிரடி உத்தரவு!
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்படும். இப்போது அரசுப்பள்ளிகளில் 13,331 புதிய ஆசிரியர்களை நியமிக்க முதல்வரிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்த செயல்முறையை முடிக்க 5 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரையிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி மேலாண்மை குழு சார்பில், தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் பேர் பணிநியமனம் செய்யப்பட இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.