தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தற்போதைய தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, அரசூழியரின் மனைவிக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அவ்வரசூழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறப்பு தற்செயல் விடுப்பு:
தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். அவர்களை போற்றும் விதமாக தமிழகத்தில் பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் அரசு வேலைகளில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் நடைபெற அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர். அவர்கள் நலன் கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில், அரசு ஊழியர்கள் தான் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசால் அவர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்பட்டது. வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி அரசு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும்.
இந்த சிறப்பு விடுப்பு அரசின் வழிகாட்டுதல் படி அதிகபட்சமாக 14 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் அரசு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாள்.20.1.1997 ன் படி அரசு பணியாளரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச் சான்றின் அடிப்படையில் 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு என அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.