தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 450 க்கும் மேற்பட்ட காலியிடம் – உடனடி நியமனம்!
தமிழகத்தில் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் 450க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்காக, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்று சென்றுள்ளதால், ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அரசு, காலியிட எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர பணியாளர்கள் நிரப்ப கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதனால் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுகலைபட்டத்தாரி/ பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர்களை இந்த காலியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 450 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இல்லம் தேடி கல்வி, TET தேர்ச்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இதற்கான அறிவிப்பில், மாவட்ட வாரியாக காலியிட விவரம், சம்பளம், தகுதிகள், வயது வரம்பு போன்ற அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நேரடியாக இப்பணிக்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இது குறித்த அதிக விவரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள கோப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.