மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசல் – 2 பேர் உயிரிழந்த பரிதாபம்! மாவட்ட நிர்வாக உதவி எண்கள் அறிவிப்பு!
மதுரை சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் இன்று கள்ளழர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு. இந்த வருடம் திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வைகை கரையில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டனர். இந்நிலையில் கள்ளழர் வைகையாற்றில் இறங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு:
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே திருவிழா, பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதால் ,இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர். இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான நேற்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார்.
பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் இறங்கியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். இந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 9498042434 என்ற உதவி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.