மாநிலத்தில் மின் கட்டணம் 2.68% உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி! ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் மின் கட்டணம் 2.68% உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் உயர்வு:
இந்தியாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று, அதனால் ஏற்பட்ட வேலை இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒன்றை மட்டும் நீட்டித்த மத்திய அரசு!
ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்த்த அறிவுறுத்தியது. பல மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டண விவரங்களை தாமதமாக சமர்ப்பிக்கின்றனர். மேலும் அதில் பிரதிபலிக்காத கட்டண விவரங்களை அளித்ததாகவும் குற்றம் சாட்டியது. நிதி நெருக்கடியை ஈடு செய்ய மின் நுகர்வு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியது. இந்த நிலையில் உத்தரகண்ட் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
அம்மாநிலத்தில் மின் கட்டணம் 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது, வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது. ரூ.2.90, ரூ.4.20, ரூ.5.80, ரூ.6.55 என வீட்டு உபயோகக் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு யூனிட்டுக்கு 10 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 33 kV மின்னழுத்த அளவில் விநியோகத்தை பெறும் நுகர்வோருக்கு மின்னழுத்த தள்ளுபடியை 2.5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக ஆணையம் உயர்த்தி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.