மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 146 காளைகள் பங்கேற்பு – 2ம் சுற்று நிறைவில் 11 வீரர்கள் படுகாயம்!
தற்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் 2ம் சுற்றில் சுமார் 146 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளான பொங்கல் பண்டிகையானது ஜல்லிக்கட்டு போட்டிகள் இல்லாமல் நிறைவடையாது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில வருடங்களாக தவறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் அரசு வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல் நடைமுறைகளுடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சில பகுதிகளில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ம் சுற்று நிறைவடைந்த நிலையில், இதில் மொத்தம் 146 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுமார் 11 காளைகளை அடக்கி முருகன் என்பவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இவரை தொடர்ந்து கார்த்தி என்பவர் 8 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்திருக்கிறார். இதில் முதலிடத்தை பிடித்த மாடு பிடி வீரர் முருகன், கண்ணில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மாடு முட்டியதில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிர 2ம் சுற்று முடிவில் காயமடைந்த மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 11 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.