1 முதல் 10ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறப்பு – 144 தடை உத்தரவு அமல்!
கர்நாடகாவில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட ஹிஜாப் விவகாரம் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து இன்று (பிப்.14) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏற்பட்ட திடீர் கலவரம் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் கடந்த 9ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதாவது, கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்கள் வகுப்பறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து பின்னர் கலவரமாக உருவாகியது. இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
இந்நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், தற்போதுள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்த அரசு 10 ஆம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், PUC, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த வகையில் இன்று (பிப்.14) முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவுக்கு எதிராக பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.
அந்த வகையில் இன்று முதல் அனைத்து உயர்நிலை பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்படுவதாகவும், மாவட்ட ஆணையர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் அமைதியான முறையில் வகுப்புகளை நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ‘அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பின், கல்லூரிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் . கல்லூரிகள் முன்பு போல் சுமூகமான சூழ்நிலையில் செயல்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது தான் எங்கள் முதல் முன்னுரிமை.
இது தொடர்பான அறிக்கையை கல்வி அமைச்சர் சமர்ப்பித்த பின்னர் அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’ என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இன்று (பிப்.14) முதல் பிப்ரவரி 19 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை விதித்து உடுப்பி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
இந்த உத்தரவு பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை ஆணையர் எம் குர்மா ராவ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவின்படி, பள்ளிகளின் சுற்றுச்சுவரை சுற்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதே போல ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் உட்பட அனைத்து வகையான கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.