முழு ஊரடங்கில் 12 மணி நேரம் தளர்வுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தை அடுத்து அம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 4) ஒரு நாள் மட்டும் 12 மணி நேரம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு
பாஜக செய்தித்தொடர்பாளர் நுபு ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவத்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாக கருதிய அம்மாவட்ட நிர்வாகம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் கடந்த வாரம் தையல்காரர் கன்ஹையா லால் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து உதய்பூரில் உள்ள ஏழு காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இப்போது அம்மாவட்டத்தில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையடுத்து அந்நகரில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஊரடங்கு காலங்களில் மொபைல் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது தளர்வுக்கு பின் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அந்த சேவைகளை மீட்டெடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தாரா சந்த் மீனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
அந்த வகையில் இன்று (ஜூலை 4) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு காலங்களில் உதய்பூர் நகர மக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் உதய்பூரில் சமீபத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய சில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.