தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், இந்த நேரத்தில் மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டு உள்ளது. அதனால் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.