அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை திடீர் உயர்வு – அதிருப்தியில் பொதுமக்கள்!
சமீபத்தில் ஏற்பட்ட டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திர பிரதேச மாநில அரசுப் பொது போக்குவரத்தின் ஏபிஎஸ்ஆர்டிசி கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இந்த தீடீர் உயர்வுக்கு பொது மக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் துவங்கி சமையல் எரிவாயு வரை விலை உயர்வை கண்டுள்ளது. இந்த டீசல் விலை உயர்வால் ஆந்திர பிரதேச மாநில அரசின் பொது போக்குவரத்து பேருந்து பயணத்திற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. அதாவது டீசல் விலை உயர்வு காரணமாக ஆர்டிசிக்கு சுமை ஏற்பட்டுள்ளதாக ஏபிஎஸ்ஆர்டிசி எம்டி துவாரகா திருமலா ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், டீசல் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ள நிலையில் பராமரிப்புக் கட்டணத்தை செலுத்தாவிட்டால், மாநகராட்சி நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து கட்டாய நிபந்தனைகளின் கீழ் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது டீசல் செஸ் வரி உயர்வின்படி பல்லேவெலுகு பேருந்துகளுக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து எக்ஸ்பிரஸ் சேவைகளில் ரூ. 5 மற்றும் ஏசி பேருந்துகளில் ரூ. 10 என பேருந்து கட்டண விலை அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் கிராமப்புற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக இருக்கும். இந்த கட்டண உயர்வு நாளை (ஏப்ரல் 14) முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட கட்டண உயர்வு என்பதை பயணிகள் உணர வேண்டும் என்றும், இதை புரிந்துகொண்டு அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று APSRTC MD நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆர்டிசியின் வருவாய் சரிந்துள்ளதாக கூறிய அவர், ஆர்டிசிக்கு நாளொன்றுக்கு ரூ.3.5 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும், கட்டாய நிபந்தனைகளின் கீழ் மட்டுமே இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.